Welcome to Vidhai - International Tamil E-Journal
Vidhai Header

சாதி ஒழிப்பு பற்றியான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை

Literature
சாதி ஒழிப்பு பற்றியான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை

சாதி அமைப்பு இந்திய சமூகத்தின் தனித்துவமான அடிப்படையான அம்சம். புத்தர் காலத்தில் தொடங்கி, குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப பல பகுதிகளில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றி சாதி ஒழிப்புக்கு முக்கிய பங்காற்றின; சாதி ஆதிக்கம் மதங்கள் மூலமாக பல மோசமான வடிவங்களில் இந்த நட்டில் உள்ள சமூகங்கள் முழுவதும் பரவியது.

இந்திய சமூக அமைப்பில் சாதியம், ஆணாதிக்கம், தனி நபர் சொத்துரிமை இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது; சர்வ தேச நிதி மூலதன மேலாதிக்கம் பெருகி வரும் இன்றைய சூழலில், சாதி மேலும் கொடுரமான வடிவங்களை எடுக்கிறது. உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, தலித்துக்கள், பழங்குடியினர், மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் & பிரிவினர் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய மாநில அரசுக்கள் சொல்வதற்கு நேரெதிராக, அடித்தட்டு மக்களின் உரிமைகளும் பொருளாதார உதவிகளும் இதுவரை பறிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை கூட காவி பெருநிறுவன பயங்கரவாத ஆட்சியால் ஒழிக்கப்பட்டு விட்டது. சாதிய முறை தொழிலாளர்களின் சமூக அமைப்பு மூலமாக உருவானது. எனவே, சாதி ஒழிப்புக்கான போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே. சாதிய தோற்றத்திற்கான காரணமும் சாதிய ஒழிப்புக்கான வர்க்கப் போராட்டமும் (இந்த இரண்டும்) எப்போதும் இணைந்து பயணிக்க வேண்டும்.

சமூகம் பல மாற்றங்களை உள்வாங்கியது போல, சாதியும் பல்வேறு வடிவங்களை அதற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்கிறது. சீர்திருத்த நடவடிக்கைகள் இப்போது இருக்கும் அரசியல் அமைப்பு முறையில் சாதியை ஒழிப்பதற்காக அல்லாமல், மாறாக குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளையும் வர்க்கங்களையும் ஒருங்கிணைத்து சுரண்டும் சமூக அமைப்பாக இருகின்றது.

பொதுவாக, இந்திய பொதுவுடமை இயக்கங்கள் மனிதத் தன்மையற்ற சாதியம் எப்படி பரிணாமம் பெற்று வந்தது என்று திட்டவட்டமாக ஆராயவில்லை. செயல்பாட்டிற்கான வரைவுத் திட்டம் இந்திய பொதுவுடைமைக் கட்சியால் 1930-ல் தயாரிக்கப்பட்டு, சாதிய ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டாலும், பொதுவுடைமைக் கட்சி அம்பேத்கருடன் கூட்டாக இணைந்து 1930-ல் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் ஜனநாயகக் கடமையாக இதை முன்னெடுத்தது. 1940 முதல் பொதுவுடைமைக் கட்சியின் தலைமை இந்த சாதி ஒழிப்பு வரைவுத் திட்டத்தில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். அதற்குப் பதிலாக, இந்திய சாதிய முறை பற்றி மேற்கட்டுமானம் எனும் இயந்திரத் தனமான மதிப்பீட்டை பின்பற்றத் தொடங்கியது; மேலும் எப்படி சாதியம் அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் இரண்டிற்குள்ளும் செயல்படுகின்றது; இந்திய சமூகத் தோற்றத்தில், அதிகார அரசியலில், சொத்து குவிப்பதிலும், நிலஉடைமையிலும், தொழில் பிரிவிலும் (மற்றும் பல) சாதியம் எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை முழுவதும் புறக்கணித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத தலித்துகள் பொதுவுடைமை இயக்கங்களில் இருந்து விலகிச் சென்றார்கள்.

சாதிய அமைப்பின் இந்த திட்டவட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், பத்தாண்டுக்களுக்கு முன், இந்திய பொதுவுடைமைக் கட்சி – சிவப்பு நட்சத்திரம் மற்றும் அதைப்போல் சாதி எதிர்ப்புத் திட்டம் கொண்ட இயக்கங்கள் சாதி எதிரான இயக்கமாக இணைந்து தெளிவான செயல் திட்டத்துடன் சாதியை மொத்தமாக ஒழிக்க செயல்ப்பட்டு வருகின்றனர். பல்வேறு இயக்கங்கள் மற்றும் முன்னெடுப்புத் திட்டங்களின் கூட்டு செயல்பாட்டால், 22 ஏப்ரல் 2012-ல் சாதி ஒழிப்பு இயக்கம் (Caste annihilation movement) தொடங்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளில் தன் பணிகளை செய்து வருகின்றது.

இன்று நம் நாட்டில் இருக்கும் சாதிகள் வர்ண பாகுபடுகளில் இருந்து தோன்றின; அதற்கான ஆதாரங்கள் ரிக் வேதங்களில் முழுமை பெறாத வடிவங்களில் காணப்படுகின்றன. அதன் பிறகு சதுர் வர்ணம், தொழில் பிரிவுகளும் அதன் பலன்களும் நான்கு வர்ணங்களுக்குள் பிரித்துக் கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், பார்ப்பனர்கள் அறிவைப் பெறவும் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும். சத்ரியர்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். வைசியர்களும் சூத்திரர்களும் பொருட்களை உற்பத்தி செய்யவும், விவசாய மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில், பார்ப்பனர்களே இயற்கையின் விளைச்சலுக்கும் அனைத்து விதமான உற்பத்தி உழைப்பின் பலன்களுக்கும் முழு உரிமையாளர் என மனுஷ்மிருதி தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறது. மனு கூற்றின் படி; “பிராமணராக பிறந்த சிறப்பின் காரணத்தால், இந்த உலகில் உள்ள அனைத்தும் பிராமணர்களுக்கே சொந்தம்” (மனுஷ்மிருதி 1.100). இயற்கையின் பலன்களும் உற்பத்தி உழைப்பின் பலன்களும் சத்ரியர்களுக்குக் கிடையாது என மேலும் மனு சொல்கின்றது.

இயற்கையின் மற்றும் உழைப்பின் பலன்களின் ஒரு பகுதி மற்ற வர்ணத்க்ச் சேர்ந்தவர்களுக்கு பார்ப்பனர்கள் விருப்பதின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கலாம் என்று மனு கூறுகின்றது. மனுஷ்ருமிதி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளது, “பிராமணர்கள் தங்களின் சொந்த உணவை உண்ணுகின்றனர்; தங்களது சொந்த ஆடைகளை அணிகின்றனர்; தங்களது சொந்த பொருட்களை தானமாக அளிக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் பிராமணர்களின் உதவியால் கருணையால் உயிர் வாழ்கின்றனர் (மனுஷ்மிருதி 1.101).

சூத்திரர்கள் பற்றி மனுஷ்மிருதி கூறி இருப்பதாவது: "கடவுள் சூத்திரர்களுக்கு ஒரே ஒரு பணியைத் தான் கொடுத்திருகின்றார்; மற்ற மூன்று வர்ணத்தில் உள்ளவர்களுக்கு அமைதியாகவும் எந்த எதிர்ப்பும் இன்றி சேவை செய்ய வேண்டும்" (மனுஷ்மிருதி 1.91).

சூத்திரர்களும் வைசியர்களும் உற்பத்தி செய்யும் பிரிவினராக இருக்கையில், பார்ப்பனர்கள் பிறப்பின் அடிப்படையில் அனைத்து உற்பத்தி பொருளுக்கும் சொந்தக்காரர் ஆகும் உரிமை உள்ளது, உபரி உற்பத்திகள் அனைத்தும் அவர்களுக்கே முழுமையாக சொந்தம், குறிப்பாக சூத்திரர்களின் உழைப்பும் அவர்களுக்குச் சொந்தமாகின்றது. உற்பத்தியில் ஈடுபடும் பகுதியினர், பெரும்பாலான மக்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான குறைந்த பட்ச கூலியைப் பெறுகின்றனர். அடுத்த நாள் தேவைக்கு அவர்கள் பார்ப்பனர்களையே நம்பி இருக்க வேண்டியிருக்கின்றது. எனவே, மனுஷ்மிருதி பின்வருமாறு கூறுகின்றது: "பிராமணர்கள் தங்கள் தேவைக்குப் போக மீதமுள்ள உணவைப் பயன்படுத்தி கிழிந்த துணிகளை, கெட்டுப் போன தானியங்களை மற்றும் பழைய பாத்திரங்களை சூத்திரர்களுக்குக் கொடுக்க வேண்டும்" (மனுஷ்மிருதி 1.125).

மக்களின் மீதான மதங்களின் ஆதிக்கத்தை அதிகளவு பயன்படுத்தி சாதிய முறை பல ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு புதிய சூழலுக்கும் ஏற்ப தன்னை தக்கவைத்துக் கொண்டு வருகின்றது. இதுவரை சாதிய முறை சந்தித்த அனைத்து சாதி ஒழிப்புக்கான முயற்சிகளைக் கடந்து உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. எனவே, சாதி ஒழிப்பு இயக்கம் இதுவரை சாதிக்கு எதிராகப் போராடிய இயக்கங்களைப் பற்றி ஆராயவும் மதிப்பீடு செய்யவும் வேண்டும். சாதியை ஒழிக்க கோட்பாட்டு ரீதியிலான விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த பின்வரும் முதன்மையான பணிகளை நாம் செய்ய வேண்டும்:

அ. சாதி ஒழிப்பு இயக்கம் மூலமாக அனைத்து பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து பார்ப்பன மனுவாத அடிப்படையில் அமைந்துள்ள அரசைத் தூக்கி எறிய வேண்டும்; இந்த நாட்டில் மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் என்பதை நிறுவ வேண்டும்.

ஆ. இதுவரை நிலம் சார்ந்த கேள்விகளுக்காக நடந்த ஆய்வுகளும் கருத்தரங்கங்களில் முன்வைக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளும், தலித்துகளுக்கு நிலவுடைமை மறுக்கப்பட்டதையும், ஆதிவாசிகளுடைய நிலங்கள் பறிக்கப்பட்டதையும் உறுதிபடுத்துகின்றன. இப்போது நடைமுறையில் இருக்கும் நில உச்ச வரம்பு சட்டங்கள் பன்னாட்டு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நிலங்களை அபகரிக்கும் குழுக்களும் சாதகமடைவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றன.

இ. பழங்கால நடைமுறைகள், நம்பிக்கைகள், மரபுகள், திருமண முறை, பெயர்கள், உடை மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் சாதி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டும் செல்வாக்கு செலுத்திக் கொண்டும் இருப்பதால், சாதி ஒழிப்பு இயக்கம் பல ஆராய்ச்சிகளையும் கோட்பாட்டு ரீதியிலான விவாதங்களையும் முன்னெடுக்க வேண்டும். மேலும் இதற்கு எதிராக நீண்ட கால அடிப்படையிலான பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். சாதி ஒழிப்பு இயக்கம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் மதங்கள் மற்றும் சாதிகள் ஏற்படுத்தியுள்ள தடைகளுக்கு எதிராகவும் அறிவியல் பார்வையிலும் ஜனநாயக கொள்கைகள் அடிப்படையிலும் பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும்.

ஈ. பார்ப்பனிய கொள்கை நடைமுறை படுத்தும் சாதிய முறை மனுஷ்ருமிதி வலியுறுத்துவது; மதங்களின் அடிப்படை வாதங்கள் சாதிய முறையை நிரந்தரமாக்க உதவி செய்கின்றன. சாதிக்கு எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தவும் மற்றும் சாதி எதிர்ப்பு மதிப்புகள் மதச்சார்ப்பற்ற சமூக மதிப்புகள் வளர சாதிய ஒழிப்பு இயக்கம் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும்.

நீண்ட காலத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, பின்வரும் உடனடித் திட்டங்கள் திட்டவட்டமான சமீபத்திய நிலைமைகளுக்கு ஏற்ப முன்வைக்கப்படுகின்றது.

அ. பார்ப்பன இலக்கியங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள்; இவைகள் சாதிய முறையை நிலைத்திருக்கச் செய்கின்றன. சாதி ஒழிப்பு இயக்கம் இவற்றுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரங்களை செய்ய வேண்டும்.

ஆ. சாதி/சாதிய உட்பிரிவுகள் சார்ந்த திருமண முறைகளை நிலைத்து நிற்கவும், சாதியை மீறி திருமணம் செய்பவர்களை தீவிர குற்றவாளிகளாக சமுகத்தின் முன் நிறுத்தவும், இடைகாலத்தில் இருந்த கிராம நாட்டாமை முறை திணிக்கப்பட்டது. இதற்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமாக கொலை செய்தனர். சாதிய ஒழிப்பு இயக்கம் இதற்கு எதிராக தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்க வேண்டும். சாதிகளுக்கு இடையே திருமணம் நடக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இ. உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் கல்வி, சுகாதாரம், மக்கள் வசிப்பதற்கான வீடுகள், மற்றும் பல தொடர்ந்து தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் ஆக்கப்பட்டது. இதன் விளைவாக, சரிசமமான கல்வி மற்றும் அனைவருக்குமான வாய்ப்பு போன்ற முழக்கங்கள் எல்லாம் தண்ணீரில் எழுதிய வெற்று எழுத்துகளாக மாறிவிட்டன. பாடத்திட்டத்தின் கூறுகள் பிற்போக்கு சமுகத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட்டது. சாதி ஒழிப்பு இயக்கம் இந்த கொள்கைகளுக்கு எதிராகவும், சரிசமமான மற்றும் கட்டாயக் கல்வியும், வீடும் வீட்டுவசதிகளும், சுகாதாரமும் மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் பிரச்சாரம் செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி இருக்க வேண்டும் மற்றும் ஆங்கில மொழி அறிவின் அடிப்படையிலான வேறுபாடுகள் கல்வியில் இருக்கக்கூடாது. இந்த நோக்கத்துடன் நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவும் இதில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு முன்னுரிமைகள் அளிக்கவும் போராட வேண்டும்.

ஈ. கல்வியில் இட ஒதுக்கீட்டிற்காகவும் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பதவி மூப்பு அளிக்கவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான அடுக்குக்கு (creamy layer) எதிராகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான அடுக்கு மேற்சொன்ன கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்கின்றன.

உ. அனைத்துவிதமான சாதிய ஒடுக்கு முறைகளையும் சமுக வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் நடைமுறையில் இருக்கும் தீண்டாமை பாகுபாடுகளை தீவிரமாக எதிர்த்து போராட வேண்டும். தொடர்ந்த பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் இவைகளை ஒழிக்க சாதகமான சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.

ஊ. இப்போது நிலவும் சாதி மற்றும் வகுப்பு வாத ஆதிக்கத்தினால், குறிப்பாக பாசிச வகுப்புவாத இந்துத்துவா சக்திகளால், பார்ப்பனர்களின் பெயர்கள், உடைகள் மற்றும் உணவு முறைகள் மக்களிடம் புகுத்தப்படுகின்றது. மேலும் தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுகளான மாட்டுக் கறி, பன்றிக் கறி உண்ணும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. பசுக்கள் கொல்வதைத் தடுக்கும் பெயரில் எருமைகள் மற்றும் எருதுகளை கறிக்காக வெட்டப்படுவதையும் தடை செய்துள்ளனர்; இவை ஏழைமக்களுக்கு புரதச் சத்துகள் குறைவான விலையில் கிடைக்க காரணமாக இருப்பதையும் சேர்த்து தடுக்கின்றது. சாதி ஒழிப்பு இயக்கம் அனைத்து முற்போக்கு சக்திகளையும் சேர்த்து ஜனநாயகமான வழியில் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு சாதிய முறை கொண்டுவரும் கட்டுப்பாடுகளை தகர்க்க வேண்டும்.

எ. சாதிய ஒழிப்பு இயக்கம் சாதிய முறைக்கு எதிரான நடவடிக்கைகளை உடனே எடுக்க விவாதிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் என்ன சூழல் நிலவுகின்றதோ அதற்குத் தகுந்தாற்போல உடனடி வரைவுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். தேவைப்படுமாயின் கிளை இயக்கங்களை உருவாக்கி இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏ. சாதிகளுக்கு இடையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். சாதிய முறைக்கும் பெண் அடிமைத்தனத்திற்கும் காரணமாக இருக்கும் ஆணாதிக்கத்தை எல்லா விதத்திலும் எதிர்க்க வேண்டும். சாதிய முறையாலும் அடிப்படை மதவாதத்தினாலும் நடைமுறையில் இருக்கும் பெயர்கள், உணவு முறை, அணியும் உடைகள், மற்றும் பலவற்றையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் இந்த நிலைகளுக்கு எதிரான போராட்ட வடிவத்தை முன்னெடுத்து அவைகளைக் களைய வேண்டும்.

ஐ. சாதி ஒழிப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் சாதி ஒழிப்பு இயக்கத்தின் சாதிக்கு எதிரான கொள்கைகளை மற்றும் மதச் சார்பின்மை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பரப்பவும் கலாச்சாரம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். கலாச்சார இயக்கங்களை முழுவதுமாகப் பயன்படுத்தி மேற்சொன்னவற்றை நிறைவேற்ற சாதி ஒழிப்பு இயக்கம் தன்னால் ஆன அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சாதி ஒழிப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கங்களில் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களின் தொடச்சியாகவும் நீண்ட கால மற்றும் உடனடித் திட்டங்களின் சரியான அணுகுமுறையை ஏற்படுத்தவும், தேவையான சூழலை ஏற்படுத்த, கருத்தரங்கங்களில் முன்வைக்கப்பட்ட ஆராய்ச்சிகளை இயக்கத்திற்க்கான தனி இதழில் பிரசுரிக்க வேண்டும். மேலும் இதழில் வெளியான கருத்துக்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் விவாதிக்க வேண்டும். இதன் விளைவாக எழும் கேள்விகளை விவாதித்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் காலாண்டு இதழ்களாகவும் இணையத்திலும் வெளியிட வேண்டும். இந்த இதழை மற்ற மொழிகளிலும் வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயக்கத்துக்கான செய்திகளையும் உண்மை அறியும் குழுவின் அறிக்கைகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அம்பலப்படுத்தும் செய்திகளையும் இதழில் வெளியிட வேண்டும்.

மேற்கூறிய திட்டங்களை நிறைவேற்ற, சாதி ஒழிப்பு இயக்கம் அனைத்திந்திய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி, இதில் இணைய விரும்பும் அமைப்புகளை இணைத்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு இயக்கமும் இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படும் மற்ற இயக்கங்களை சாதி ஒழிப்பு இயக்கத்துடன் இணைக்க வேண்டும். இவற்றில் அரசு சாரா நிறுவனங்கள், ஆளும் வர்க்கத்தின் அமைப்புகள், வெளி நாடுகளில் இருந்தும் அரசிடம் இருந்தும் நிதி பெறும் அமைப்புகளையும் சாதி ஒழிப்பு இயக்கம் புறக்கணிக்க வேண்டும்.


Share: